கோலாலம்பூர், டிச 13: கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காஜாங்கில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புக்கிட் ஜாலில் மற்றும் காஜாங்கில் நடத்தப்பட்ட சோதனையில் 26 முதல் 51 வயதுடைய நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப் பட்டதாகக் காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் சைட் ஹாசன் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கடந்த ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக நம்புவதாகவும், காஜாங்கைச் சுற்றி ஒரு போலி சான்றிதழ் RM30 முதல் RM50 வரை விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், 171 அரசு மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள் மற்றும் 70 தனியார் மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள், 19 அதிகாரப்பூர்வ மருத்துவ ரசீதுகள், ஒரு மடிக்கணினி, 8 கைப்பேசிகள், 6 மருத்துவ விடுப்பு சான்றிதழ் புத்தகங்கள் மற்றும் 5 பென் டிரைவ்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி ஏமாற்றியதற்காக குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக அனைத்து நபர்களும் கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று முகமட் சைட் கூறினார்.
"மருத்துவ விடுப்பு சான்றிதழ்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையக ஹாட்லைன் 03-8911 4242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் குறிப்பாக முதலாளிகளுக்குக் காவல்துறை அறிவுறுத்துகிறது," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா




