புத்ரா ஜெயா டிச 13 - டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது சுகாதார
அமைச்சர் பதவியை நேற்று மீண்டும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்
கொண்டார். இலக்கவியல் சுகாதார உருமாற்றத்தை விரிவான அளவில்
அமல்படுத்துவது தனது தலையாயப் பணி இலக்காகும் என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த உருமாற்ற முயற்சிகள் துணை சுகாதார அமைச்சர் டத்தோ
லுக்கானிஸ்மான் அவாங் சவுனி மற்றும் தலைமைச் செயலாளர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜைனி ஊஜாங் தலைமையிலான சுகாதார அமைச்சின்
குழுவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சகாதார அமைச்சுக்கு மீண்டும் தலைமையேற்பதற்கு வாய்ப்பு வழங்கிய
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் மாட்சிமை தங்கிய
பேரரசருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவன் அருளால். இக்குழுவின் ஒத்துழைப்புடன் கடினமான இந்தப்
பொறுப்பை நான் சுமக்கத் தயாராக இருக்கிறேன் என்று அவர் அமைச்சின்
வரவேற்புக் கூடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று காலை 8.15 மணியளவில் அமைச்சுக்கு வந்த டாக்டர்
ஜூல்கிப்ளியை லுக்னிஸ்மான், டாக்டர் ஜைனி, சுகாதாரத் துறை
தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான்
ஆகியோர் வரவேற்றனர்.
நேற்று அமைச்சரவை மாற்றத்தை அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம், சுகாதார அமைச்சை வலுப்படுத்துவதற்கு டாக்டர்
ஜூல்கிப்ளியின் அனுபவம் துணை புரியும் என்பதால் அவர்
அப்பொறுப்புக்கு நியமிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி முதல் 2020 பிப்ரவரி 24 வரை சுகாதார அமைச்சர் பதவியை ஜூல்கிப்ளி வகித்து வந்தார். சுகாதார அமைச்சர் பதவியை வகித்து வந்த டாக்டர் ஜலிஹா முஸ்தாபா பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர் இப்பதவியை ஏற்றுள்ளார்.




