கோலாலம்பூர், டிச.13- கிழக்கு கரை ரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்.) திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரும் முழுமையாக ஒத்துழைத்து திட்டமிட்டபடி அத்திட்டம் முடிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சீனாவின் வியூக ஒத்துழைப்புக்குக் குறிப்பாக, முதலீடுகள் மற்றும் அதன் நிறுவனங்கள் வழங்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திறன்கள் தொடர்பான ஆதரவுக்கு மலேசியா நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் சொன்னார்.
நேற்று காலை மலேசியாவுக்கான சீனத் தூதர் ஓயாங் யுஜிங் மற்றும் வாங் டோங்ஜோ தலைமையிலான சீனாவின் சி.சி.சி.சி. நிறுவனத்தின் தூதுக் குழுவுடனான சந்திப்பின் போது இந்த உறுதி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
சி.சி.சி. என்பது இ.சி.ஆர்.எல்.திட்டத்திற்கான பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் பணியை நிறைவேற்றும் ஒப்பந்த நிறுவனம் ஆகும். இச்சந்திப்பின் போது வாங் தனது அனுபவங்களையும் இந்த திட்டத்தின் மேம்பாடுகளையும் பகிர்ந்து கொண்டார்
மெகா திட்டங்களுக்கான மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பு குறிப்பாக, நகரங்களுக்குள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து உள்கட்டமைப்பு தொடர்பில் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம் என்று அன்வார் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நான்னிங்கில் வாங்குடன் நடத்தப்பட்டச் சந்திப்பின் தொடர்ச்சியாக இந்ந தூதுக்குழுவின் வருகை அமைந்திருந்தது.




