கோலாலம்பூர், டிச 13 - இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பது குறித்து தாம் பெரிதும்
நிம்மதியடைவதாக ஹன்னா இயோ கூறினார்.
நேற்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் இளைஞர் மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சை தொடர்ந்து வழி நடத்துவதற்கு தமக்கும்
துணையமைச்சர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிமிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் சொன்னார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை
அமைச்சுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக விளங்குகிறது. இந்த
ஆண்டில் ராக்கான் மூடா திட்டங்களும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்
போட்டிகளும் நமது பிரதான இலக்காக விளங்குகின்றன என்று அவர்
தெரிவித்தார்.
அண்மைய சில மாதங்களாக மக்களின் பேசு பொருளாக இருந்து வந்த
அமைச்சரவை மாற்றம் தொடர்பான விவகாரத்திற்கு நேற்றுடன் முற்றுப்
புள்ளி வைக்கப்பட்டது குறித்து நிம்மதியடைகிறேன். இனி நாம் நமது
வேலையைத் தொடர்ந்து மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.
கோலாலம்பூர் கோல்ப் அண்ட் கன்ட்றி கிளப்பில் நடைபெற்ற 2023ஆம்
ஆண்டிற்கான அமெச்சூர் கோல்பர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி
பெற்ற தேசிய குழுவினரைப் பாராட்டும் வகையில் நடத்தப்பட்ட விருந்து
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய திட்டங்கள் எதனையும் தொடங்கும் திட்டம் அமைச்சுக்கு இல்லை
எனக் கூறிய அவர், நடப்புத் திட்டங்களை செம்மைப் படுத்தும்
அதேவேளையில் அமைச்சின் விளையாட்டுத் திட்டங்கள் மூலம்
அனைத்து மலேசியர்களும் பயனடைவதை உறுதி செய்வது தங்களின்
தலையாயக் கடமையாகும் என்றார்.




