கோலாலம்பூர், டிச 12- பயங்கரவாதம் தொடர்பான எட்டு
குற்றச்சாட்டுகளில் எதிர்வாதம் புரியும்படி டாயேஷ் பயங்கரவாத
அமைப்பின் “வூல்ஃப் பெக்“ பிரிவின் முன்னாள் தலைவருக்கு இங்குள்ள
உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுபாங் ஜெயா, சீபீல்டு தோட்ட ஸ்ரீ மகா
மாரியம்மன் ஆலயத்தை தாக்கப் போவதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையும்
இதில் அடங்கும்.
இந்த வழக்கை மஹாடி மாமாட் (வயது 38) என்ற அந்த ஆடவருடன்
தொடர்புபடுத்த போதுமான அடிப்படை முகாந்திரங்கள் உள்ளதை அரசுத்
தரப்பு வெற்றிகரமாக நிரூத்ததைத் தொடர்ந்து அவரை எதிர்வாதம்
செய்யும்படி நீதிபதி டத்தோ நோர்டின் படாருடின் உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த
குறைபாடும் இல்லை என்பதிலும் நீதிமன்றம் மனநிறைவு கொள்கிறது.
ஆகவே குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்த
நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு மூன்று
வழிமுறைகள் உள்ளன. விசாரணையின் போது குற்றவாளிக்
கூண்டிலிருந்து சாட்சியம் அளிப்பது, மௌனம் காப்பது அல்லது சாட்சிக்
கூண்டிலிருந்து சத்திய பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில்
சாட்சியமளிப்பது ஆகியவையே அந்த மூன்று வழிமுறைகளாகும். இதில்
சாட்சி கூண்டிலிருந்து சாட்சியமளிக்கும் போது அவர் குறுக்கு விசாரணை
செய்யப்படலாம் என நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் எதிர்வாதம் செய்வதற்கு எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 3
மற்றும் 18, மே 27 முதல் 30 வரை மற்றும் ஜூன் 24 ஆகிய தேதிகளை
நீதிமன்றம் நிர்ணயித்தது.
சுபாங் ஜெயா, சீபீல்டு தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தைத் தாக்கப்
போவதாகவும் நான்கு மலேசியப் பிரஜைகளை கொல்லப் போவதாகவும்
“செஜாத்தி செஜீவா“ எனும் வாட்ஸ்ஆப் குழு வாயிலாக மிரட்டல் விடுத்ததாக அவருக்கு எதிரான முதல் இரு குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.




