மூவார், டிச 12- திருடப்பட்டதாக கூறப்படும் மூதாட்டி ஒருவருக்குச்
சொந்தமான 515,000 வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையைப் பெற்றதாகச்
சுமத்தப்பட்ட பத்து குற்றச்சாட்டுகளை வணிகர் ஒருவர் மறுத்து
விசாரணை கோரினார்.
மஞ்சிட் கவுர் ஷிரான் சிங் (வயது 72) என்ற மூதாட்டிக்குச் சொந்தமான
வெ.515,523.80 தொகையை இங்குள்ள ஜாலான் சுலைமானில் உள்ள
சி.ஐ.எம்.பி. வங்கிக் கிளையில் பத்து பரிவர்த்தனைகள் மூலம்
நேர்மையற்ற முறையில் பெற்றதாக முகமது ஃபைருஸ் முகமது நோர்
(வயது 36) குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதிக்கும் 2019ஆம் ஆண்டு
டிசம்பர் 26ஆம் தேதிக்கும் இடையே இக்குற்றத்தை புரிந்ததாக முகமது
ஃகைருசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகமது ஃபைருஸ் பெயரி பதிவு செய்யப்பட்ட அந்த வங்கிக் கணக்கில்
அப்பணம் வைக்கப்பட்டிருந்ததோடு அது திருட்டுப் பணம் என்பது
அவருக்கு தெரியும் என நம்புவதற்கும் வலுவான காரணங்கள் உள்ளதாக
நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டு வரையிலான
சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை
செய்யும் குற்றவியல் சட்டத்தின் 411வது பிரிவின் கீழ் அவர்
குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஃபைருஸை ஒரு நபர் உத்தரவாதத்துடன்
7,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட்
ஃபாத்தின் டாலியா காலிட், வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம்
14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.




