ஷா ஆலம், டிச 11- இம்மாதம் முதல் தேதி தொடங்கிய சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழா 2023, கடந்த பத்து நாட்களில் 250,000க்கும் மேற்பட்ட வருகையாளர்களைப் பதிவு செய்தது.
இந்த புத்தக விழாவில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கடந்த 2006 தொடங்கி 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இவ்விழா பொது மக்கள் மற்றும் அனைத்துலக புத்தகக் கண்காட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விழாவாக விளங்குவதை புலப்படுத்துகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
இந்த புத்தக கண்காட்சிக்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள புத்தக வெளியீட்டாளர்கள் பதிவு செய்த வர்த்தக மதிப்பும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மிகவும் உயரிய மற்றும் தொடர்ந்து பிரபலமடைந்து வரும் விழாவாக இது விளங்குவது இதன் மூலம் நிரூபணமாகிறது என்றார் அவர்.
இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த சிலாங்கூர் பொது நூலகக் கழகத்திற்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும். இதன் மூலம் புத்தக தொழில்துறைக்கு புத்துயிரளிக்கவும் அறிவாற்றலை கலாசாரமாக்கவும் இயலும் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் 2023ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழாவை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
அனைத்துலக நிலையிலான இந்த புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்ததன் மூலம் மக்களிடையே, குறிப்பாக சிலாங்கூர்வாசிகளிடையே வாசிக்கும் மற்றும் எழுதும் கலாசாரத்தை ஊக்குவிப்பதில் வெற்றி காணப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்








