சிகாமாட், டிச 9- கோவிட்-19 நோய்த தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெள்ளம் காரணமாக திறக்கப்பட்ட அனைத்து தற்காலிக நிவாரண மையங்களிலும் நிலையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) சுகாதார அமைச்சு தொடரும்.
தற்போது நாட்டில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.
எனினும், கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளதோடு கவலையளிக்கும் அளவிலும் இல்லை என்று அவர் சொன்னார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், குறிப்பாக நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சுகாதார சோதனைகளை நடத்துவது உட்பட தற்போதுள்ள எஸ்.ஒ.பி. நடைமுறைகளைக் கடைபிடிக்கும்படி வெள்ள நிவாரண மையங்களில் உள்ள சுகாதார அமைச்சின் ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
வெள்ள சூழ்நிலையை எதிர் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். கோவிட்-19 சோதனைக் கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம். நோய்க்கான அறிகுறி இருந்தால் வழக்கம் போல் அவர்களை நாங்கள் தனிமைப்படுத்துவோம் என்றார் அவர்.
தற்போதைய கோவிட்-19 நோய் தொற்றின் அதிகரிப்பு மிதமான சம்பவங்களையும் லேசான அறிகுறிகளையும் மட்டுமே உள்ளடக்கியது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








