ஷா ஆலம், டிச. 9 - சிலாங்கூர் பொது நூலகக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் அனைத்துலகப் புத்தகக் கண்காட்சி 2023 முடிவுக்கு வர இன்னும் இரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில் 300,000 பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கியதில் இருந்து நேற்று வரை அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த 200,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர் என்று அதன் இயக்குனர் ஜஃப்ருல்லா அரிஸ் கூறினார்.
எங்களுக்கு சாதகமான வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு இனங்களைச் சேர்ந்த அனைத்து வயதினரோடு அண்டை நாடுகளில் இருந்தும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளனர். மேலும் 'இலக்கியவாதிகளின் இதயமும் மனமும்' பிரிவு மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இன்று மற்றும் நாளை நடைபெறும் நிகழ்வுகளின் மூலம் இறுதி இரண்டு நாட்களில் பார்வையாளர்களின் இலக்கு எண்ணிக்கையை எட்டுவோம் என்று எதிர் பார்க்கிறோம். வார இறுதி என்பதால், இலக்கை விட அதிகமாக இருக்கலாம் என்று சிலாங்கூர் கினியுடனான சந்திப்பின் போது கூறினார்.
சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையின் ஒத்துழைப்பின் வாயிலாக இந்த ஆண்டு நிகழ்வில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றதாக ஜஃப்ருல்லா குறிப்பிட்டார்.








