கோலாலம்பூர், டிச 7- “மடாணி அரசாங்கத்துடன் ஓராண்டு“ நிகழ்வுகள் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டு நிர்வாகத்தில் அமல்செய்யப்பட்ட கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அடைவு நிலையை பொது மக்கள் அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் சிறந்த தளமாக இந்த நிகழ்வுகள் விளங்கும் என்று ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நாளை தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவிருக்கும் மடாணி அரசுடன் ஓராண்டு எனும் நிகழ்வில் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
கோலாலம்பூருக்கு அப்பால் உள்ளவர்களின் வசதிக்காக இந்த நிகழ்வை சற்று சிறிய அளவில் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடத்தும்படி தகவல் இலாகாவை நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.
டிவி மூன்றில் இன்று காலை ஒளிபரப்பான மலேசியா ஹாரி இனி எனும் நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினார்.
முதன் முறையாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் ஒற்றுமை அரசிலுள்ள அனைத்து அமைச்சுகள், துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களும் கலந்து கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மடாணி மெகா விற்பனை, ரஹ்மா மலிவு விற்பனை, அதிர்ஷ்டக் குலுக்கு, போலீஸ் சம்மன்களுக்கான கழிவு, வேலை வாய்ப்புச் சந்தை உள்ளிட்ட அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் சொன்னார்.
மடாணி அரசாங்கத்துடன் ஓராண்டு எனும் இந்த நிகழ்வு மக்கள் ஓன்று கூடும் சாதாரண நிகழ்வாக மட்டுமின்றி இது வரை நாம் செய்வதவை யாவை?, ஒவ்வொரு அமைச்சுகளின் வாயிலாக மக்கள் பெற்ற பலன்கள் என்ன போன்றத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் மையமாக விளங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தார்.








