கோலாலம்பூர், டிச 4- நாட்டில் துடிப்புமிக்க இயக்கங்களில் ஒன்றாக விளங்கி வரும் மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு மீண்டும் 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன் இளைஞர் மணி மன்றத்திற்கு 50,000 வெள்ளியை வழங்கினேன். 2024 ஆம் ஆண்டு மானியமாக மேலும் 50,000 வெள்ளியை வழங்குவதாகப் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அவர் அறிவித்தார்.
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தேசிய பேராளர் மாநாட்டை அமைச்சர் சிவகுமார் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவர் முருகன் தலைமையில் மணி மன்றம் சிறப்பாக வலம் வருவது பாராட்டுக்குரியது.
1956-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தமிழ் இளைஞர் மணி மன்றம் தொடங்கப்பட்டது. தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் வழிகாட்டுதலோடு சமூக கலைமணி சா.ஆ.அன்பானந்தனை முதல் தலைவராக கொண்டு தமிழ் இளைஞர் மணி மன்றம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
மணிமன்றம் முன்னேறுவோம் எனும் கொள்கையோடு தொடந்து அதிகமான தமிழ் இளைஞர்களை கொண்ட பேரியக்கமாக செயல்படுகிறது.
நாட்டில் பலமிக்க இயக்கங்களில் தமிழ் இளைஞர் மணிமன்றமும் ஒன்று என்பதை நாம் மறுக்க முடியாது.
தமிழ் சார்ந்த, கலை, கலாச்சாரம் நிகழ்வுகளையும் தலைமைத்துவப் பயிற்சி செயல்திறன் பயிற்சி என இளைஞர்களுக்குப் பல பயிற்சிகளும் வழங்கி கொண்டு வருகிறது.
மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றத்திற்கு தமது ஆதரவு தொடரும் என்று அவர் கூறினார்




