கோலாலம்பூர், டிச 4 - மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டதாகவும் இறந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும் (பி.ஐ.டி.) நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் குரல் பதிவின் தகவல்களை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் கோவிட்-19 நோய் உச்சத்தில் இருந்த போது பகிரப்பட்ட பதிவு அது என அமைச்சு தெளிவுபடுத்தியது. பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என சம்பந்தப்பட்டத் தரப்பினரை அது கேட்டுக் கொண்டது.
அதே சமயம் நம்மிடையே தொடர்ந்து இருந்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொது மக்களை அமைச்சு வலியுறுத்தியது.
பொது இடங்களில் முகக்கவரி அணிவது, கைகளைச் சோப்பு கொண்டு கழுவுவது ஆகிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். நோய்க்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் சுகாதார அமைச்சின் எச்சரிக்கைகளை பின்பற்றி செயல்படுங்கள் என அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
அதே சமயம், நெரிசல் மிகுந்த, மூடப்பட்ட இடங்களையும் நெருங்கியத் தொடர்புகளையும் தவிர்ப்பதும் அவசியமாகும் எனவும் அது குறிப்பிட்டது.




