கோலாலம்பூர், டிச 3- பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
இந்த பள்ளிகளை காப்பாற்ற ஒரே தீர்வு இடமாற்றம் மட்டுமே. அந்த வகையில் இந்த 26 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்ய பொருத்தமான நிலத்தை தேர்வு செய்யும் அனைத்து முயற்சிகளும் தொடர்கிறது என்று அவர் சொன்னார்.
தற்போது கல்வி அமைச்சில் தமிழ்ப் பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது நாடு முழுவதும் தமிழ்ப் பள்ளி பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து எங்களுக்கு முறையான அறிக்கையை வழங்கி வருகிறார்.
பகாங் குவாந்தான் ஜெராம் தோட்டத்தில் கொள்கலனில் இயங்கி வரும் ஜெராம் தமிழ்ப் பள்ளியை இடமாற்ற செய்யும் பணிகளும் தொடங்கி விட்டன. மிக விரைவில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார் அவர்.
மலேசிய கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றிரவு புத்ரா உலக வாணிப மையத்தில் மெர்டேக்கா மண்டபத்தில் 25 ஆம் ஆண்டு அனைத்துலக விருதளிப்பு விழாவுக்கு தலைமை ஏற்று உரையாற்றிய போது அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.








