ஷா ஆலம், நவ 30 - உலு சிலாங்கூர் மாவட்டத்தில் நிபுணத்துவ
மருத்துவமனையை நிர்மாணிப்பது உள்பட மருத்து வசதிகள் தரம்
உயர்த்தப்பட வேண்டும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன்
வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் அகமது
ஃபர்ஹான் பவுஸி மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலேஹா
முஸ்தாபாவின் அரசியல் செயலாளர் நிபிஷாவுடன் அண்மையில்
நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அகமது ஃபர்ஹானுடன் நடத்திய சந்திப்பின் போது உலு சிலாங்கூரில்
நிபுணத்துவ மருத்துவமனை நிர்மாணிக்கப்படுவதன் அவசியத்தை டாக்டர்
பிரகாஷ் வலியுறுத்தினார். அதே சமயம் நோயாளிகள் காத்திருக்கும்
நேரத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக சுகாதார கிளினிக்குகளின் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உலு சிலாங்கூர் பெரிய வட்டாரமாக இருந்த போதிலும் இங்கு
இளைஞர்களுக்கு போதுமான விளையாட்டு வசதிகள் இல்லை. ஆகவே,
இங்கு மினி விளையாட்டரங்கை அமைப்பதற்கான முயற்சிகளை
அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பின்னர் சுகாதார அமைச்சரின் அரசியல் செயலாளர் நபிஷாவுடன் நடத்திய
சந்திப்பின் போதும் இங்கு மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டியதன்
அவசியத்தை அவர் வலியுறுத்தினார். உலு சிலாங்கூர் மக்கள்
சிகிச்சைக்காக வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. நிபுணத்துவ
மருத்துவமனை நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் இவ்வட்டார மக்கள்
நிறைவான மற்றும் தரமான மருத்துவச் சேவையைப் பெறுவதற்குரிய
வாய்ப்பு கிட்டும் என அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, நோயளிகளின் வசதிக்காகச் சுகாதார கிளினிக்குளின்
எண்ணிக்கை மற்றும் சேவைத் தரத்தை அதிகரிப்பதன் மூலம் இவ்வட்டார
மக்கள் எதிர்நோக்கி வரும் சுகாதாரப் பிரச்சனைக்கு முழுமையான
தீர்வினைக் காண முடியும் என்றார் அவர்.




