கோலாலம்பூர், நவ. 30 - பினாங்கு பாயான் லெப்பாஸுக்கு அருகிலுள்ள பத்து மவுங்கில் கட்டுமானத் தளம் இடிந்து விழுந்த சம்பவத்தில் முதலாளிகள் மீது சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று எச்சரித்தார்.
இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒன்பது வெளிநாட்டுத் தொழிலாளர்களில் ஐவருக்கு சொக்சோ பாதுகாப்பு இல்லை. வெளிநாட்டுத் தொழிலாளியின் பங்களிப்பைப் பதிவுசெய்து சொக்சோ செலுத்தத் தவறிய முதலாளிகள், தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4)ன் பிரிவு 6ஐ மீறியுள்ளனர்.
இதன் மூலம் கிடங்கு கட்டுமானத் திட்ட தளத்தில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்திய முதலாளிகள் மீது சொக்சோ சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பதிவுசெய்து பங்களிக்கத் தவறினால், பிரிவு 94, சட்டம் 4இன் கீழ் வழக்குத் தொடரலாம்.
முதலாளிகளுக்கு வெ.10,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
"வெளிநாட்டுத் தொழிலாளர்களின் சொக்சோ பங்களிப்பைப் பதிவுசெய்து செலுத்துவதைப் புறக்கணிக்கும் எந்தவொரு முதலாளியுடனும் மனிதவள அமைச்சு சமரசம் செய்துக் கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
கட்டுமானத் துறையில் தொழிலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் ஏற்கெனவே 2020ஆம் ஆண்டு 1 ஜனவரி ஆம் தேதி முதல் சொக்சோவில் கண்டிப்பாக பங்களிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் 31 நிலவரப்படி, 18 லட்சத்து 80 ஆயிரம் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டம் 4இன்படி வேலை விபத்து பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள்




