குவா மூசாங், நவ 30 - இங்குள்ள கம்போங் டோல் பகுதியில் நேற்று
இந்தோனேசிய பால் வெட்டுத் தொழிலாளியை தாக்கிக் கொன்றது வன
விலங்கு புலிதான் என்பதை தேசிய பூங்கா மற்றும் வன விலங்கு
பாதுகாப்பு இலாகா (பெர்ஹிலித்தான்) உறுதிப்படுத்தியது.
சம்பவ இடத்திலிருந்து போலீசாரால் வெளியே கொண்டு வரப்பட்ட அந்த
ஆடவரின் உடல் மீது தாங்கள் மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம்
தெரிய வந்ததாக அத்துறையின் இயக்குநர் முகமது ஹபிட் ரோஹானி
கூறினார்.
புலியினால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் ரப்பர் தோட்டத் தொழிலாளி
ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் குவாங் மூசாங் மாவட்ட போலீஸ்
தலைமையகத்திடமிருந்து தாங்கள் முன்னதாக புகாரைப் பெற்றதாக அவர்
சொன்னார்.
இறந்தவர் உடல் மீது நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் அவர்
வரிப்புலியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
புலியினால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் ரப்பர் தோட்டத் தொழிலாளியான
ஷபாய்னி (வயது 36) என்பவரின் உடல் முற்றாக சிதைந்த நிலையில்
கண்டு பிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அவரின் கழுத்தில் காயங்கள் காணப்பட்டதோடு வலது கை, கால்களின்
இரு கட்டை விரல்கள், மற்றும் இடுப்புக் கீழ் உடலின் பல பாகங்கள்
காணப்படவில்லை என கூறப்பட்டது.




