ஷா ஆலம், நவ 30 - போதைப் பொருளை வாங்குவதற்கு 10 வெள்ளியை
வழங்க மறுத்த காரணத்திற்காகப் பெற்றத் தாயை குத்திய ஆடவருக்கு
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டுச் சிறைத்தண்டனை
விதித்தது.
நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் மூலம் தமக்குகெதிரான குற்றச்சாட்டு
வாசிக்கப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகச் சாய் சூன் தாக்
(வயது 29) என்ற அந்த இளைஞர் கூறியதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்
டி.அஸ்வினி இந்த தீர்ப்பை வழங்கினார்.
கடந்த திங்கள்கிழமை 50 வயதான தன் தாயார் ஹியு யோக் செங்கை
தாக்கி காயப்படுத்தியதாக செம்பனைத் தோட்டத் தொழிலாளியான சாய்
மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு வரையிலான
சிறைத்தண்டனை அல்லது 2,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது
இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 323வது
பிரிவின் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த ஆடவரை
போலீசார் ஜாலான் மாஜூ லங்காப் சாலையோரம் அன்றைய தினம் இரவு
9.30 மணியளவில் கைது செய்தனர்.




