கோலாலம்பூர், நவ 30 - இன்றைய மக்களவைக் கூட்டத்தில் 2023ஆம்
ஆண்டு புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டு சட்ட மசோதா மீதான
விவாதம் முக்கிய இடத்தைப் பெறும்.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான மூன்றாம்
கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று சுகாதார அமைச்சர் டாக்டர்
ஜலிஹா முஸ்தாபா இந்த விவாத அங்கத்தை நிறைவு செய்து
உரையாற்றுவார்.
இந்த மசோதா மீதான விவாதத்தில் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கலந்து கொண்ட வேளையில் அங்கீகாரத்திற்காகத் தாக்கல்
செய்யப்படுவதற்கு முன்னர் இந்த மசோதா தொடர்பில் எழுப்பப்பட்ட
கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிப்பார்.
பதின்ம வயதினர் புகையிலை பொருள்களை வாங்குவது அல்லது விற்பது,
அல்லது புகைப்பது தொடர்பான சேவைகளை வழங்குவது உள்ளிட்ட
நடவடிக்கைகளுக்கு இந்த மசோதா தடை விதிக்கிறது.
இதனிடையே, இன்று காலை 10.00 மணிக்கு கூட்டம் தொடங்கும் போது
அமைச்சர் கேள்வி பதில் அங்கத்தின் போது சீன மற்றும் இந்திய
சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்படும் விசா தளர்வு, உள்ளிட்ட விவகாரங்கள்
மீது உறுப்பினர்கள் கேள்வியெழுப்புவர்.
தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் நலனைப்
பாதுகாப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து
ரந்தாவ் பாஞ்சாங் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ
சித்தி ஜைலா முகமது யூசுப் கேள்வியெழுப்புவார்.
சீன மற்றும் இந்திய நாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வழங்கப்படும் 30 நாள்
விசா தளர்வு இரண்டரை கோடி சுற்றுப்பயணிகளை ஈர்க்கும்
அரசாங்கத்தின் முயற்சிக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என
பாகான தொகுதி உறுப்பினர் லிம் குவான் எங் சுற்றுலா மற்றும் கலை,
கலாசாரத் துறை அமைச்சரிடம் வினவுவார்.




