கெர்த்தே, நவ 30 - பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனம் இதுவரை மிக உயர்ந்த பட்ச நிலையில் உயர்நெறியை பேணி வருவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார்.
பெட்ரோனாஸின் தற்போதைய சிறந்த செயல்திறன் நாட்டிற்குக் கோடிக்கணக்கான வெள்ளியை வருமானமாக ஈட்ட உதவுகிறது. அந்நிறுவனம் சிறந்த நிர்வாகத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால் இந்த அடைவு நிலையை அடைந்திருக்க முடியாது என்று அவர் சொன்னார்.
பலவீனமான நிர்வாகச் செயல்திறன், குழப்பமான நிர்வாக முறைகள், ஊழல் நடைமுறைகளால் நன்மதிப்பைப் பாதிக்கும் சூழ்நிலைகளை நாடு பல முறை எதிர்நோக்கிய போதிலும் பெட்ரோனாஸ் தொடர்ந்து மிக உயர்ந்த உயர்நெறியைப் பேணி வருவதில் பெருமை கொள்கிறேன்.
பெட்ரோனாஸின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால், நமது நாட்டை ஒரு சிறந்த தேசமாக உயர்த்த முடியும். ஆனால் பெட்ரோனாஸ் போன்று அரசியல் தலைவர்கள், நிர்வாகம், தெளிவான கொள்கைகள் மற்றும் செம்மையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்று அன்வார் கூறினார்.
பெட்ரோனாஸின் கிழக்கு கரை வளாகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெட்ரோனாஸ் நிர்வாக துணைத் தலைவர் (கீழ்நிலை) டத்தோ சசாலி ஹம்சா மற்றும் கிழக்கு கரை மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 600 பணியாளர்கள் கலந்து கொண்டனர்
பெட்ரோனாஸின் சிறப்பான செயல்பாடு, சீனா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.
சவூதி அரேபிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ அடுத்த ஆண்டு மலேசியாவில் தனது நிர்வாகக் கூட்டத்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மேலும் கூறினார்.




