கோலாலம்பூர், நவ 30 - தலைநகரில் கடந்த
22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் முன்பு வெளிநாட்டு தூதரக
அலுவலகம் மற்றும் குடியிருப்பாக விளங்கிய
பங்களாவில் செயல்பட்டு வந்த முதலீட்டு
மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர்.
அதிகாரிகளை ஏமாற்றுவதற்காகப் பல
வெளிநாட்டு தூதரக அலுவலகங்கள் உள்ள
பகுதியில் உள்ள இந்த பங்களாவை அந்த
மோசடிக் கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது.
அந்த பங்களா இன்னும் செயல்பாட்டில் உள்ள தூதரக அலுவலகம்போல்
காட்சியளிக்கிறது. அங்கு துணைத் தூதரகத்தின் அறிவிப்பு பலகை
அகற்றப்படாததோடு ஆயுதமேந்திய பணியாளர்களும் காவல் புரிகின்றனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 20
முதல் 62 வயதுக்குட்பட்ட 16 ஆண்கள்
மற்றும் 12 பெண்கள் அடங்கிய 28 நபர்கள்
கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான்
வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை
இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப்
கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 13 உள்ளூர்
பிரஜைகள், ஏழு சீன நாட்டினர், புருணை
மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த தலா
நான்கு பேரும் அடங்குவர் என்று நேற்று
இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
பேசிய அவர் குறிப்பிட்டார்.
குறுகிய காலத்தில் லாபகரமான
வருமானத்தை வழங்கும் ;பண விளையாட்டு;
என்ற விளம்பரத்துடன் முதலீடுகளை
வழங்குவதே இக்கும்பலின் பாணியாகும்
என்று ரம்லி கூறினார்.
இந்த கும்பல் உள்நாட்டினருக்கு மட்டுமின்றி
சீனா, புருணை மற்றும் தென் கொரிய
முதலீட்டாளர்களுக்கும் முதலீட்டு
வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.
இச்சோதனையின் போது, 41 கைப்பேசிகள்,
13 கடப்பிதழ்கள் மற்றும் ஒரு லெக்ஸஸ் கார்
உட்பட பல்வேறு பொருட்களையும்
போலீசார் கைப்பற்றினர்.
இந்த திட்டத்தில் ஏற்பட்ட இழப்பீட்டின் அளவு இன்னும் விசாரணையில் உள்ளது.
அதே நேரத்தில் பங்களாவின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்
தற்போது வெளிநாட்டில் இருப்பதால் விரைவில் வாக்குமூலம் வழங்க
அழைக்கப்படுவார் என்று ரம்லி கூறினார்.




