காஸா, நவ 29- காஸா தீபகற்பத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 160 பேரின் உடல்களை சாலைகள் மற்றும் இடிந்த கட்டிடங்களின் அடியிலிருந்து மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். இதனுடன் சேர்ந்து இந்த போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000த்தை தாண்டியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 6,150 சிறார்கள் மற்றும் 4,000க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது.
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக மீட்புப் பணியாளர்கள் தற்போது வழக்கமான நடைமுறைகளைப் பயன்படுத்தி உடல்களை அப்புறப்படுத்தி வருவதாக அது தெரிவித்தது.
இந்தப் போரில் சுமார் 6,500 பேர் காணப்படவில்லை என்று அதிகாரப்பூர்மற்றத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் 4,700 பெண்களும் சிறார்களும் அடங்குவர்.
கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது முதல் பொது மக்களும் மீட்புப் பணியாளர்களும் தங்களால் இயன்ற வரை போராடி சடலங்களை மீட்டு வருகின்றனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட வான், கடல் மற்றும் தரை வழித் தாக்குதல்களில் சுமார் 300,000 வீடுகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் சுமார் 50,000 குடியிருப்புகள் முற்றாக அழிந்தன.
தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்த போதிலும் காஸாவின் தென் தீபகற்பத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் வட பகுதியில் உள்ள தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்புவதை ஆக்கிரமிப்புப் படையினர் தடுத்து வருகின்றன.
தங்கள் வீடுகளின் நிலைமையைக் காண்பதற்கும் காணாமல் போன உறவினர்களைத் தேடுவதற்கும் வந்த பொது மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் சுட்டதில் மூவர் உயிரிழந்ததோடு மேலும் பலர் காயங்களுக்குள்ளாயினர்.








