ஷா ஆலம், நவ 28 - புக்கிட் கந்தாங் தொகுதிக்கான பெரிக்கத்தான்
நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் இன்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துக்
கொண்டார்.
மக்களவையில் இன்று பிரதமர் கேள்வி நேரத்தின் போது டத்தோ சைட்
அபு ஹூசேன் ஹபிஷ் சைட் அப்துல் ஃபாசால் என்ற அந்த நாடாளுமன்ற
உறுப்பினர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிரதமர் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வியை முன்வைத்த
டத்தோ சைட், நாட்டின் பத்தாவது பிரதமரான தம்புன் உறுப்பினருக்கும்
(அன்வார்) மடாணி கூட்டணிக்கும் புக்கிட் கந்தாங் தனது ஆதரவைப்
புலப்படுத்திக் கொள்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்பு டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமைத்துவத்தில்
மேற்கொள்ளப்பட்டதைப் போல் அரசாங்கத்துடன் சுமூகமான முறையில்
கலந்துரையாடும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக்
கொண்டார்.
மடாணி சமூகத்தின் உருவாக்கத்திற்கு அன்வாருடன் ஒத்துழைப்பை
நல்கும்படி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் டான்ஸ்ரீ மொகிடின்
யாசினுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதற்கு முன்னர் பெர்சத்து கட்சியின் ஜெலி, குவா மூசாங், கோல கங்சார்
மற்றும் லபுவான் உறுப்பினர்கள் பிரதமர் அன்வாருக்குத் தங்களின்
ஆதரவைப் புலப்படுத்திக் கொண்டனர்.




