கோலாலம்பூர், நவ 28 - எதிர்வரும் டிசம்பர் முதல் தேதி தொடங்கி முப்பது
நாட்களுக்கு மலேசியா வரும் சுற்றுப்பயணிகளுக்கு விசா விலக்களிப்பு
வழங்கும் நடவடிக்கை இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி நாட்டின்
பொருளாதார மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டை பேராக் மாநிலத்திற்கு வருகை புரியுங்கள்
ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளதால் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு
சரியான தருணத்தில் வெளியிடப்பட்டதாகத் தாங்கள் கருதுவதாக மலேசிய
சீன சுற்றுலா சங்கத்தின் பேராக் மாநிலத் தலைவர் லாவ் வேங் சும்
கூறினார்.
இந்த சலுகையின் மூலம் பேராக் மாநிலத்திற்கு வருகை புரியும் சீன
நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தாங்கள் நம்புவதாக
அவர் குறிப்பிட்டார்.
சீன நாட்டு முதலீட்டார்கள் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இங்கு
முதலீடு செய்வதற்குரிய வாய்ப்பினையும் இந்நடவடிக்கை ஏற்படுத்தும்.
மேலும், நீண்ட நாட்கள் இங்கு தங்குவதற்குரிய வாய்ப்பினை
வழங்குவதன் மூலம் அவர்கள் நமது நாட்டு சுற்றுலாத் தலங்களையும்
கலாசாரங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.
விசா விலக்களிப்பு சலுகைக்கு ஏற்ப பேராக் மாநிலத்திற்கு வருகை
தாருங்கள் ஆண்டை பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மாநில
அரசு மற்றும் டூரிசம் பேராக் அமைப்புகளுடன் தாங்கள் இணைந்து
செயல்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் சீன நாட்டு சுற்றுப்பயணிகளுக்கு 30 நாள் விசா
விலக்களிப்பு சலுகையை மலேசியா எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி வழங்கவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அண்மையில் கூறியிருந்தார்.
சீன-மலேசிய விவேக பங்காளித்துவத்தின் 50ஆம் ஆண்டு
நிறைவையொட்டி இந்த விசா சலுகை வழங்கப்படுவதாகவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.




