கோலாலம்பூர், நவ 28 - வெள்ளத்தை எதிர்கொள்வதில் அரசாங்கத்தின்
தயார் நிலை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று
மக்களவையில் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்கும் சொத்துகளின் இழப்பை குறைப்பதற்கும் ஏதுவாக விரிவான
வெள்ளப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை அமல் செய்வதில்
அரசாங்கத்தின் தயார் நிலை குறித்து ஜெம்புல் தொகுதி தேசிய முன்னணி
உறுப்பினர் சம்சுல்கஹார் முகமது டெலி கேள்வியெழுப்பவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் கேள்வி நேரத்தின் போது இந்த
கேள்வி பிரதமரிடம் முன்வைக்கப்படும் என்று நாடாளுமன்ற
அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள கூட்ட நிகழ்ச்சி நிரலில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் எதிர்பார்ப்பது என்ன
என்ற கேள்வியையும் சம்சுல்கஹார் எழுப்புவார்.
மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேகத் தடங்களைக் கொண்ட
நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் மோட்டார் சைக்கிள்
தடங்களைக் கொண்டிராத நெடுஞ்சாலைகளில் அத்தகைய வசதிகளை
ஏற்படுத்தித் தருவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து செத்தியு
தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஷஹாரிஜூல்கர்னாய்ன்
அப்துல் காடீர் பொதுப்பணித்துறை அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
இதனிடையே, 2023ஆம் அண்டு பொது சுகாதாரத்திற்கான புகைப்பொருள்
கட்டுப்பாட்டுச் சட்ட மசோதா இன்று முதல் வாசிப்புக்கு மக்களவையில்
தாக்கல் செய்யப்படும்.
கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய இந்த மக்களவைக்
கூட்டத் தொடர் வரும் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.




