ஈப்போ, நவ 28- இங்குள்ள லஹாட், தாமான் பட்ரிஷாவில் நேற்று நிகழ்ந்த
தீயிடல் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகப் பேர்வழிகளைப் போலீசார்
கைது செய்துள்ளனர்.
அவ்விருவரும் கைது செய்யப்பட்டதன் வழி ஈப்போ வட்டாரத்தில் நிகழ்ந்த
பல தீயிடல் மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும்
சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகப் போலீசார் நம்புகின்றனர்.
இருபத்தேழு மற்றும் 44 வயதுடைய அவ்விருவரும் ஜாலான் பெசார்
செமோரில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் நேற்று மாலை 6.30
மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.
கைதானவர்களிடமிருந்து புரோட்டோன் சாகா பிஎல்எம் கார், கைப்பேசிகள்
மற்றும் உடைகள் கைப்பற்றப்பட்டதாக அவர் சொன்னார்.
வாட்ஸ்ஆப் மூலம் மட்டுமே தொடர்பு கொண்ட அனாமதேய நபர் ஒருவர்
இத்தகையச் செயல்களைப் புரிவதற்கு தங்களை பேஸ்புக் விளம்பரம்
மூலம் பணியமர்த்தியதாக பிடிபட்ட நபர்கள் விசாரணையின் போது
தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் இத்தகையச் செயல்களில் தாங்கள்
இம்மாதம் தொடக்கம் முதல் ஈடுபட்டு வருவதாக அவ்விருவரும்
கூறியுள்ளனர். எனினும், இவர்கள் இத்தகைய செயல்களைப் புரிவது
புதிதல்ல என நாங்கள் சந்தேகிக்கிறோம். இதன் தொடர்பில் விசாரணை
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
கைதான இருவருக்கு எதிராக 13 மற்றும் 20 குற்றச்செயல்கள்
பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவ்விருவரும் போதைப் பொருளைப்
பயன்படுத்தியது அவர்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில்
தெரிய வந்தது என்றார்.
ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோட்டோன் எக்ஸ்50 ரகக்
கார் நேற்று தீடிரென தீப்பற்றியதோடு வீட்டின் இதரப் பகுதிகளுக்கும் தீ
பரவியது.




