ஷா ஆலம், நவ 25- யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் ஐ-பெர்மூஸிம் திட்டத்தின் வாயிலாக விழாக்கால மற்றும் பருவகால வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகர்களுக்கு கடனுதவி வழங்குகிறது
பெருநாள் காலத்தின் போதும் பழ பருவகாலத்தின் போது வர்த்தகம் புரிவோருக்காக பிரத்தியேகமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்த அறவாரியம் கூறியது.
இந்த ஐ-பெர்மூஸிம் திட்டத்தின் வாயிலாக ஹிஜ்ரா அறவாரியம் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 20,000 வெள்ளி வரை வர்த்தக மூலதன உதவியை வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் மிகவும் எளிதானவை என்று அது குறிப்பிட்டது.
இந்த கடனுதவியைப் பெற விரும்புவோர் http://mikrokredit.selangor.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது மாநிலம் முழுவதும் உள்ள 18 ஹிஜ்ரா கிளைகளின் கடனுதவிப் பிரிவு அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் சிலாங்கூரில் வசிக்கும், சிலாங்கூர் மாநில வாக்காளராக இருக்கும் மலேசிய பிரஜையாக இருத்தல் அவசியம். 18 முதல் 65 வயதுக்குட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு பிரத்தியேகே வர்த்தக வளாகங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
முறையான வர்த்தக பதிவையும் விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும். அரசாங்கத் துறைகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்துவதில் முறையாக நடந்து கொள்ளாதவர்களாக இருக்க க்கூடாது.








