கோலாலம்பூர், நவ 25- கெஅடிலான் கட்சியின் 2023ஆம் ஆண்டு பேராளர்
மாநாடு இன்று தொடங்குகிறது. தொடக்க அங்கமாக கட்சியின் இளைஞர்
மற்றும் மகளிர் கூட்டங்களை கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி
தொடக்கி வைத்து உரையாற்றவிருக்கிறார்.
“ரிபோர்மாஸிக்கு பொருள் தருவோம், மடாணியை உயர்த்துவோம்“ எனும்
கருப்பொருளிலான இந்த இரண்டு நாள் மாநாடு புத்ராஜெயா அனைத்துலக
மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் கெஅடிலான் இளைஞர் மற்றும் மகளிர் மாநாட்டில்
கட்சியின் ரிபோர்மாஸி இயக்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு மற்றும்
நாட்டின் பத்தாவது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி சிறப்பு காணொளி
திரையிடப்படும்.
அதிகாரப்பூர்வ தொடக்க நிகழ்வுக்குப் பின்னர் அவ்விரு பிரிவுகளின்
ஆண்டுக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டங்களில் இளைஞர் பிரிவுத்
தலைவர் ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் மற்றும் மகளிர் பிரிவுத்
தலைவில் ஃபாட்லினா சீடேக் ஆகியோர் தொடக்கவுரை நிகழ்த்துவர்.
இதனிடையே, கட்சியின் தேசிய மாநாட்டை அதன் தேசியத் தலைவர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு 8.30 மணிக்கு
அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து கொள்கையுரை ஆற்றுவார்.
இந்த மாநாட்டில் 2,374 பேராளர்களும் 1,500 பார்வையாளர்களும் கலந்து
கொள்வர் என்று கெஅடிலான் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின்
நசுத்தியோன் இஸ்மாயில் கடந்த புதன் கிழமை கூறியிருந்தார்.
மேலும், ஓற்றுமை அரசாங்கத்தின் உறுப்புக் கட்சித் தலைவர்கள்,
வெளிநாட்டு அரசந்திரிகள் உள்பட 40 பிரமுகர்களும் இம்மாநாட்டில்
கலந்து கொள்வர் என அவர் சொன்னார்.
இந்த மாநாட்டில் பொருளாதாரம், சமூக நலன், சமூக நீதி, சிறப்பான
நிர்வாகம், அரசியல் நிலைத்தன்மை உள்ளிட்ட விவகாரங்கள் மீது
பேராளர்கள் விவாதம் நடத்துவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.








