கோலாலம்பூர், நவ 23 - இவ்வாண்டு செப்டம்பர் 20 முதல் நவம்பர் 14 வரை
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக வாகனங்களுக்கு எதிரான
“ஓப் பெர்டாகாங்கான்“ சோதனை நடவடிக்கையில் பல்வேறு
குற்றங்களுக்காக 135,1193 வாகனங்கள் சோதனையிடப்பட்டு 21,000
குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது 109 பேர் கைது செய்யப்பட்டதாக
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன்
கூறினார்.
அதிக எடையை ஏற்றியது மற்றும் சாலை விபத்துகளுக்கு வித்திடக்கூடிய
வகையில் பாதுகாப்பற்ற அம்சங்களை வாகனங்கள் கொண்டிருந்தது
ஆகியவை உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
புக்கிட் அமானில் இன்று சாலை போக்குவரத்து குற்ற மற்றும்
விசாரணைப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வுக்குத் தலைமையேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
உயிர்ப்பலியை ஏற்படுத்தக்கூடிய கனரக வாகனங்கள் குறிப்பாக லோரிகள்
மற்றும் பஸ்கள் சம்பந்தப்பட்ட விபத்துகளை தாங்கள் கடுமையாகக்
கருதுவதாக அவர் கூறினார்.
சாலை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை கனரக வாகன ஓட்டுநர்களும்
நிறுவன உரிமையாளர்களும் கடைபிடிப்பதை உறுதி செய்ய கனரக
வாகனங்களுக்கு எதிரானச் சோதனைகளை தாங்கள் தொடர்ந்து நடத்தி
வரப் போவதாகவும் அவர் சொன்னார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 1,078 ஓப் பெர்டாகாங்கான்
சோதனை நடவடிக்கைகளை போலீஸ் துறை நடத்தியுள்ளதாகக் கூறிய அவர், கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 797ஆக மட்டுமே இருந்தது என்றார்.
இவ்வாண்டு செப்டம்பர் 20 தொடங்கி நவம்பர் 14 வரை அமலாக்க மற்றும்
சோதனை நடவடிக்கைகளைத் தமது தரப்பு அதிகரித்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.




