கோலாலம்பூர், நவ 23 - திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ள வேளையில்
கிளந்தான் மாநிலத்தில் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்து வரும் நிலையில்
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 3,581 பேர் தற்காலிக வெள்ள துயர்
துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு 8.00க்கு இந்த
எண்ணிக்கை 3,581ஆக இருந்தது.
கோல நெருஸ் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 430
குடும்பங்களைச் சேர்ந்த 1,598 பேர் இன்னும் 15 துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயல்குழு
கூறியது.
கோல திரங்கானுவில் செயல்பட்டு வரும் ஐந்து நிவாரண மையங்களில்
279 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் இன்னும் அடைக்கலம் நாடியுள்ளனர்
மேலும், மாராங்கில் உள்ள ஆறு துயர் துடைப்பு மையங்களில் 183
குடும்பங்களைச் சேர்ந்த 732 பேர் தங்கியுள்ளனர்.
கிளந்தான் மாநிலத்தில் ஆறு துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து
செயல்பட்டு வரும் வேளையில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 96
குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் அங்கு தங்கியுள்ளனர்.
பேராக் மாநிலம் வெள்ளத்திலிருந்து முற்றாக விடுபட்டுள்ளது.
இம்மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஒரே துயர் துடைப்பு மையமான
கிரியான் மாவட்டத்தின் அலோர் பொங்சு தேசிய பள்ளி நேற்று
மாலையுடன் மூடப்பட்டது.
வெள்ளம் முற்றாக வடிந்ததைத் தொடர்ந்து அந்த மையத்தில்
தங்கியிருந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் நேற்று வீடு திரும்ப
அனுமதிக்கப்பட்டனர்.




