கோலாலம்பூர், நவ 23- காஸா பகுதியில் உள்ள சுகாதார மையங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.
பெர்டானா குளோபல் அமைதிக்கான அறக்கட்டளையின் கீழ் உள்ள மருத்துவமனைகள் மற்றும் காஸாவிலுள்ள இந்தோனேசிய மருத்துவமனை மீதான அண்மையத் தாக்குதல்களையும் மலேசியா கண்டிப்பதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கூறியது.
சுகாதார மற்றும் முக்கிய அடிப்படை வசதிகளை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைப்பது 1949 ஜெனிவா ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதாகும். பாலஸ்தீனர்களை முற்றிலுமாக துடைத்தொழிக்கும் முயற்சியின் மற்றொரு தெளிவான நிரூபணம் இது என அது தெரிவித்தது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் இந்த கொடூரமான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் காஸா மக்களின் சொல்லொணாத் துயரங்கள், விரைவான மற்றும் உறுதியான பதில் நடவடிக்கையைக் கோருகின்றன என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசாவில் மனிதாபிமான பேரழிவுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை மலேசியா பிரதிபலிக்கிறது என்று விஸ்மா புத்ரா மேலும் கூறியது.
இந்த மனிதாபிமானமற்ற செயல்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின்படி சுகாதார வசதிகளின் புனிதத்தை மதிக்கும்படி அந்நாட்டை வலியுறுத்த வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தை மலேசியா மீண்டும் வலியுறுத்துகிறது.




