கோலாலம்பூர், நவ 23- தொற்றா நோய்களுக்கு உண்டாகும் செலவினம்
மற்றும் அந்நோய்கள் தொடர்பான அரசாங்கத்தின் திட்டங்கள்,
பொருளாதார மந்த நிலை காரணமாக தொழிலைக் கைவிடும்
தொழில்முனைவோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் இன்றைய
மக்களவைக் கூட்டத்தில் முக்கிய இடத்தைப் பெறும்.
தொற்றா நோய்களுக்கு குறிப்பாக நீரிழிவு நோயைக் கையாள்வதற்கு
அரசாங்கம் செலவிடும் தொகை மற்றும் மலேசியாவில் அதிகமாக
இருக்கும் தொற்றா நோய்கள் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு
காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சரிடம் பண்டார்
கூச்சிங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் கெல்வின் லீ
உவேன் வினவுவார்.
நடப்பு பொருளாதார மந்த நிலை காரணமாக வியாபாரத்தை கைவிட்ட
தொழில்முனைவோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட
தொழில்முனைவோருக்கு உதவுவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சரிடம் பண்டார்
பாரு கூலிம் உறுப்பினர் ரோஸ்லான் ஹஷிம் கேள்வியெழுப்புவார்.
மக்கள் வசதி முன்னெடுப்புக்காக இவ்வாண்டு செலவிடப்பட்டுள்ளத்
தொகை மற்றும் அந்த முன்னெடுப்புக்கான மாநில வாரியான நிதி
ஒதுக்கீடு குறித்து ஸ்ரீ காடிங் உறுப்பினர் அமினுள்ஹூடா ஹசான்
பொருளாதார அமைச்சரிடம் வினா தொடுப்பார்.
அமைச்சர் கேள்வி-பதில் அங்கத்தின் போது இந்த மூன்று கேள்விகளும்
முன்வைக்கப்படும் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள
இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் தொடரும் கேள்வி நேரத்தின் போது, வகுப்புகளில் கல்வியின்
தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக ஆசிரியர்களின் சுமையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்று விளக்குமாறு கல்வியமைச்சரை பெங்கலான் செப்பா தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ அகமது மர்ஜூக்கி ஷாஹ்ரி கேட்டுக் கொள்வார்.




