செய்தி ; சு. சுப்பையா
டாமன்சாரா.நவ.22- புக்கிட் லஞ்சாங் சட்டமன்ற தொகுதியின் பெலாங்கி டமன்சாரா அடுக்கு மாடி பகுதியில் பெட்டாலிங் மாவட்ட சமூக நல இலாகா, தனது சேவையை வழங்கியது. அரசாங்க அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியில் மக்கள் குடியிருப்புகளுக்கு சென்று சேவையை வழங்குவது பாராட்டுக்குரியது என மக்கள் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு சமூக நல சேவை புக்கிட் லஞ்சான் சட்டமன்ற தொகுதியின் இந்திய சமுதாயத் தலைவர் ( kki ) லோகநாதன் தெய்வநாயகம் ஏற்பாடு செய்திருந்தார்.
குறைந்த விலை அடுக்குமாடிகளில் வசதி குறைந்தவர்களும் முதியோர்களும் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களுக்கு சமூக நலச் சேவை தேவைப்படுகிறது. ஆகவே இந்த சிறப்பு சேவை இந்த அடுக்கு மாடியில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதியில் அரசு சாரா அமைப்பை வழி நடத்தி வரும் திருமதி ரேணுகா கேட்டுக் கொண்டார். திருமதி ரேணுகாவின் ஒத்துழைப்போடு லோகநாதன் இந்த சிறப்பு சேவையை ஏற்பாடு செய்திருந்தார்.
பெட்டாலிங் மாவட்ட சமூக நல இலாகாவின் அதிகாரி ஹஸ் நிசாம் தலைமையில் 5 வர் கொண்ட குழுவினர் இந்த சேவையை வழங்கினர். காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை பெலாங்கி டமன்சாரா அடுக்குமாடியில் உள்ள சமூக மண்டபத்தில் இந்த சிறப்பு சமூக நல சேவை நடைபெற்றது.
சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த சிறப்பு சமூக நலச்சேவையில் பங்கு பெற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் உடல் ஊனமுற்றோர் அட்டை ( ஒ.கெ.யு ) மற்றும் சமூக நல இலாகா வழங்கும் உதவி நிதி வேண்டி விண்ணப்பம் செய்தனர்.
விண்ணப்ப மனுபாரங்களை லோகநாதன், ரேணுகா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் ஒருவர் நாதன் ராமலிங்கமும் பதிவு செய்தார். மிக முக்கியமாக ரேணுகாவின் அரசு சாரா அமைப்பை சேர்ந்தவர்கள் சிறந்த தொண்டு வழங்கினர்.
இந்த சேவை காலையில் தொடங்கி நண்பகல் 1.00 மணிக்கு பிறகு சூடு பிடித்தது. அதிகமான இந்தியர்கள் இந்த சமூக நலச் சேவை பதிவில் பங்கெடுத்துக் கொண்டனர். இந்தியர்கள் திரளாக வந்துக் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
இது போன்ற சேவையை மற்ற பகுதிகளுக்கும் வழங்க இன்றைய ஆதரவு ஊக்க மூட்டலாக இருந்ததாகவும் இதன் வழி மேலும் சில பகுதிகளுக்கு சிறப்பு சமூக நல சேவை பதிவு திட்டத்தை நடத்தவிருப்பதாக லோகநாதன் தெரிவித்தார்.








