கோலாலம்பூர், நவ. 22: வணிக வாகன இன்ஜின் விவரக் குறிப்புகளை சாதாரண டீசல் வாகனங்களில் இருந்து ``பச்சை டீசல்`` வாகனங்களாக மாற்ற லஞ்சம் பெற்றதாகச் சந்தேகத்தின் பேரில் 5 சட்ட அமலாக்க அதிகாரிகள் உட்பட 9 பேர் எட்டு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இன்று காலை ஈப்போ, புத்ராஜெயா, ஜொகூர் பாரு மற்றும் கோத்தா கினாபாலு ஆகிய இடங்களில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தடுப்பு காவலில் வைக்க விண்ணப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது.
"இன்று முதல் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் அனுமதித்தார், சிலாங்கூரில் இடைத்தரகராகச் செயல்பட்ட மற்றொரு நபர், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் எம்ஏசிசி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்," என தெரிவிக்கப்பட்டது.
நேற்று, 33 முதல் 66 வயதுடைய 10 நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பல மாநிலங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
பச்சை டீசல் அந்தஸ்தைப் பெறுவதற்கு வாகனத் தரவைத் திருத்துவது அல்லது வாகன விவரங்களைச் சரிசெய்வது சிண்டிகேட்டின் செயல்பாடாகும்.
"இந்த சிண்டிகேட் 2019 முதல் 2022 வரை செயல்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. மேலும் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஐந்து சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கிய லஞ்சப் பணத்தின் மதிப்பு தோராயமாக RM1.28 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த சிண்டிகேட்டின் நடவடிக்கைகளின் விளைவாக அரசாங்கத்திற்குத் திரட்டப்பட்ட வருவாய் கசிவு 2018 முதல் 2022 வரை சுமார் RM12.73 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது``.
எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டத்தோ அஸ்மி கமருஜமானைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்து, எம்ஏசிசி சட்டம் 2009 ன் பிரிவு 16 (ஏ) (பி) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகக் கூறினார்.
- பெர்னாமா




