கோலாலம்பூர் நவ 22- இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது.
இருப்பினும் விண்ணப்பம் செய்வதில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கிறது என்ற புகார்களை மனிதவள அமைச்சு பெற்றுள்ளது.
ஒரு வேளை இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதனை பரிசீலிக்க அமைச்சு தயாராக இருப்பதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதி ராவ் மற்றும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சிவகுமார் பதில் அளித்தார்.
முடித்திருத்தும் நிலையங்கள் நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும் விண்ணப்பம் செய்வதில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் கடுமையாக இருக்கிறது என்று அவர்கள் முறையிட்டனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவகுமார், இந்த விதிமுறைகள் புதிதல்ல. ஏற்கெனவே நடப்பில் இருந்தவை.
ஒருவேளை இந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதனை பரிசீலிக்க மனித வள அமைச்சு தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
இதுவரை 329 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.
இதில் முறையாக பூர்த்தி செய்யப்படாததால் 165 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது குறுக்கிட்ட ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், இந்த மூன்று துறைகளை சேர்ந்தவர்களை ஒரு நாளில் அழைத்து விண்ணப்பம் செய்வது தொடர்பில் விளக்கம் அளிக்கலாம் என்றார்.
இந்த பரிந்துரையை வரவேற்பதாக குறிப்பிட்ட அமைச்சர் சிவகுமார், இது தொடர்பாகக் கேள்விகளை முன் வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டுவதற்காகக் குறிப்பிட்டார்.




