புத்ராஜெயா, நவ.22 - தாய்லாந்தின் உத்தேச தரைப்பாலத் திட்டம் குறித்து கவலைப்படாமல் துறைமுகங்களின் போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் மலேசியா உறுதியாக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
இதில் முக்கியமானது என்னவென்றால், செயல்திறன், போட்டித் தன்மை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் சரக்குகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் கொண்டு வருவதற்கும் உங்கள் துறைமுகங்களுக்கு கப்பல்கள் வரும். இதுபற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு சரக்கு போக்குவரத்து தேசிய பணிக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு முக்கிய மாற்று நடவடிக்கையாக இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்து நேரத்தை குறைத்து, நெரிசலான மலாக்கா நீரிணையை தவிர்க்கும் நோக்கிலான தாய்லாந்து நாட்டின் தரைப்பாலத் திட்டத்தின் மேம்பாட்டை மலேசியா அணுக்கமாக கவனித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முதலாவதாக, அது (தரைப் பாலம்) இன்னும் கட்டப்படவில்லை. இது ஒரு திட்டம் மட்டுமே. தாய்லாந்தில் கால்வாய் அமைக்கும் திட்டம் குறித்த பரிந்துரை கடந்த பல ஆண்டுகளாக பரிசீலனையில் இருந்து வருகிறது. இன்னும் நிறைவேறவில்லை என்றார் அவர்.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தாவிஷின் அமெரிக்காவில் முதலீட்டாளர்களுக்கு ஒரு டிரில்லியன் பாட் (13,250 கோடி வெள்ளி ) செலவிலான தரைப்பாலத் திட்டத்தை முன்மொழிந்தார்.
மலாக்கா நீரிணைக்கு மாற்றாக விளங்கும் குறுக்கு வழித்தடம் மலிவான, விரைவான மற்றும் பாதுகாப்பான மாற்றுக் கப்பல் போக்குவரத்துக்கு வழி வகுக்கிறது.




