கோலாலம்பூர், நவ 22- நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும்
அரசாங்கப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்
விடுக்கப்பட்டது தொடர்பில் போலீசார் 19 புகார்களைப் பெற்றுள்ளதாகத்
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன்
கூறினார்.
சிலாங்கூரில் எழு புகார்களும் கோலாலம்பூரில் ஐந்து புகார்களும்
ஜோகூரில் மூன்று புகார்களும் பினாங்கில் இரு புகார்களும் பேராக்
மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒரு புகார்களும் பெறப்பட்டதாக
நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
அந்த வெடிகுண்டு மிரட்டல்கள் யாவும் ஜெர்மன் மொழியில் ‘அமைதியைச்
சீர்குலைப்பவர்‘ எனும் பொருள் கொண்ட ‘taktstorer’ எனும் இரு மின்னஞ்சல்
கணக்குகளின் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன என அவர் சொன்னார்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார்
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் ஒத்துழைப்புடன் பள்ளியை காலி செய்து, மாணவர்களை
பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர். மாலையில் அவர்கள் பள்ளிக்குத்
திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், சம்பந்தப்பட்ட பள்ளிகளை முழுமையாகச் சோதனையிடும்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேளையில் வெடிகுண்டு இருப்பதற்கான
எந்த அறிகுறியும் தென்படாததால் அது பொய்யான மிரட்டல் என
தெரியவந்தது என்றார் அவர்.
அந்த மின்னஞ்சல் கணக்குப் புதிதாகத் திறக்கப்பட்டதும் ஆங்கிலத்தில்
இருந்த அந்த மிரட்டல் வாசகங்கள் மொழி பெயர்ப்பு செயலியைக்
கொண்டு மலாய் மொழிக்கு மாற்றப்பட்டதும் விசாரணையில்
கண்டறியப்பட்டது என அவர் கூறினார்.




