ஷா ஆலம், நவ 21- மாநிலத்திலுள்ள 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர்
இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக
விபத்துக்கான காப்புறுதி பாதுகாப்பை பெற்றுள்ளதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தக்காபுல் இன்சான் காப்புறுதித் திட்டத்திற்கு 90 லட்சம் வெள்ளியும் மரபு
ரீதியான இன்சான் காப்புறுதி திட்டத்திற்கு 1 கோடியே 20 லட்சம்
வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மொத்தம் 58 லட்சத்து 79
ஆயிரத்து 600 பேர் இந்த காப்புறுதி திட்டத்திற்கு முன்பு பதிவு
செய்துள்ளனர்.
அவர்களில் 34 லட்சம் பேர் வாக்களிப்புத் திட்ட பதிவின் மூலமாகவும்ம்
900,834 பேர் சிலாங்கூர் மாநில பதிவுத் துறையினால் நிர்வகிக்கப்படும் 7
முதல் 9 வயது வரையிலான மாணவர் ஒட்டுமொத்த காப்புறுதி
பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று
அவர் சொன்னார்.
மேலும், பிறந்து 30 நாள் முதல் 60 நாள் வரையிலான 750,000
குழந்தைகள் சிலாங்கூர் மாநில பதிவுத் துறையின் கீழ் ஒட்டுமொத்த
காப்புறுதி பாதுகாப்பைப் பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதி சேவை மையங்கள் வாயிலாக
2,300 பேர் தன்னிச்சையாகவும் மேலும் 118,078 பேர் இ-வாலட் செயலி
வாயிலாகவும் இந்த காப்புறுத் திடத்தில் பதிந்து கொண்டுள்ளனர் என்றார்
அவர்.
மாநில சட்டமன்றத்தில் இன்று இன்சான் காப்புறுதித் திட்டத்தில் பதிவு
செய்தவர்களின் எண்ணிக்கை குறித்து தாமான் மேடான் உறுப்பினர் டாக்டர் அலிப் பகாருடின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
மாநில மக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த
காப்புறுத் திட்டத்தில் 60 லட்சம் பேரை பதிவு செய்யத் தாங்கள்
திட்ட்மிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.




