ஷா ஆலம், நவ 21: கோத்தா டாமன்சாராவின் அப்டவுன் பகுதி எளிதில் எரியக்கூடிய பொருட்களால் நிரம்பி இருந்ததால் நேற்று இரவு தீ வேகமாக பரவியதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) தெரிவித்துள்ளது.
தீயை முழுவதும் அணைக்க அவரது தரப்பு தீ கட்டுப்பாட்டு நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என ஷா ஆலம் மண்டலம் 1 இன் தீயணைப்பு மற்றும் மீட்புத் தலைவர் அஹ்மட் சைடி சஃபுவான் கூறினார்.
சம்பவத்திற்கான காரணம் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிவடையும் வரை அப்பகுதி தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நாளை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், அங்குள்ள கடை ஒன்றிலிருந்து அடர்த்தியான புகை கிளம்பி, தனது உடற்பயிற்சி கூடத்திற்குப் பரவியதாகவும் அப்போது அங்கு 15 வாடிக்கையாளர்கள் பயிற்சியில் இருந்ததாகவும், உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர், மசலான் அப்துல் மனன் (53) தெரிவித்தார்.
"பஜாரைச் சுற்றியுள்ள சாலையோரங்களில் பெரும்பாலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அவை வாகனங்களால் நிரம்பி இருக்கும்,. இதுவே வார இறுதியில் நடந்திருந்தால் கற்பனை செய்து பாருங்கள்" என்று அவர் கூறினார்.
நேற்றிரவு நடந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 20 கடைகள் 90 சதவீதம் எரிந்து நாசமாகின.




