செய்தி சு.சுப்பையா
கோலாலம்பூர். நவ.20- தற்போது நாட்டில் கடுமையான மழை பொழிய தொடங்கி விட்டது. இதனால் வெள்ளப் பேரிடர் ஏற்படலாம். இந்த வெள்ளப் பிரச்சனைகளை எதிர்நோக்க மடாணி அரசு 10 கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் நிக் நஸ்மி தெரிவித்தார்.
இன்றைய நிலையில் நாடு வெள்ளப் பேரிடர் எதிர்நோக்கும் சூழ்நிலையில் இருக்கிறது. இந்த வெள்ளப் பேரிடர்களை எதிர்நோக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மீடியா சிலாங்கூர் தமிழ் பிரிவு எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் நிக நஸ்மி பதில் அளித்தார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ சாயிட் ஹமிடி தலைமையின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் நிறுவனமும் திடீர் வெள்ளத்தை எதிர்நோக்க நாடு முழுவதும் தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.
நீண்ட கால அடிப்படையில் நாடு முழுவதும் வெள்ளப் பேரிடரை எதிர்நோக்க ரி.ம. 1180 கோடி செலவிடப்படுகிறது. இத் திட்டம் முழுமை பெற நீண்ட கால அவகாசம் தேவை என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாநில அரசுகள், ஊராட்சி மன்றங்களும் திடீர் வெள்ளத்தை எதிர்நோக்கத் தயார் நிலையில் உள்ளன. மேலும் வாய்க்கால் மற்றும் வடிக்காள்களும் சுத்தம் செய்யப் பட்டுள்ளன. ஆறுகளும் தூர் வாரப் பட்டுள்ளன என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு பதில் அளித்தார்.







