ஷா ஆலம், நவ 19- கோத்தா கெமுனிங் தொகுதியில் நிலவி வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணபது தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்ற பொறுப்பாளர்களுடன் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அண்மைல் சந்திப்பு நடத்தினார்.
ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் இடைக்கால டத்தோ பண்டார் ஹாஜி செரேமி தர்மானுடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் மாநகர் மன்றத்தின் பொறியியல் துறை இயக்குநர் ஹனிப் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களான ராமு நடராஜன், ஷாகிர் அமிர், சரிபானோன் சைபோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் ஆகக் கடைசி நிலவரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பை தாங்கள் நடத்தியதாக பிரகாஷ் தெரிவித்தார்.
வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஷா ஆலம் மாநகர் மன்றம் சுசுட் எனப்படும் ஷா ஆலம் வெள்ளத் தடுப்பு பெருந்திட்டத்தை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்த திட்டம் மூலம் கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாக வெள்ளத்திற்கான சாத்தியம் நிறைந்த பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.








