ஷா ஆலம், நவ 17- சாலையின் மையகோடுகளில் “குளோவ் இன் தி
டார்க்“ எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒளிரும் சாயத்தைப் பூசும்
திட்டத்திற்கு சுங்கை லாலாங் சாலையை உலு லங்காட் மாவட்ட
பொதுப்பணி இலாகா தேர்ந்தெடுத்துள்ளது.
சாலையின் மையக்கோடுகளில் ஒளியை பிரதிபலிக்கக்கூடிய சாயத்தை
பூசுவதன் மூலம் வாகனமோட்டிகள் இரவில் பாதுகாப்பான முறையில்
வாகனத்தைச் செலுத்துவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று
உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான்
கூறினார்.
வாகனங்களின் ஒளியைப் பிரபதிபலிக்கக்கூடிய இந்த தொழில்நுட்பம்
சாலை பொறியியல் துறையில் புதிய கண்டு பிடிப்பாகும் என்று அவர்
சொன்னார்.
பாஸ்பரஸ் மூலகத்தை உள்ளடக்கிய இந்த குளோவ் இன் தி டார்க் எனும்
தொழில்நுட்பம் மின் ஆற்றலைப் பெறும் போது ஒளியை உமிழும் திறன்
கொண்டதாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கோடுகள் சூரிய சக்தி மற்றும் வாகனங்களின் ஒளியை
உள்வாங்குவதன் மூலம் மின்சக்தியைப் பெற்று பின்னர் ஒளியாக
பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.
கடந்த புதன் கிழமை அவர் பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
நந்தா லிங்கியுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் வருகை புரிந்து திட்ட
மேம்பாடுகளை நேரில் கண்டறிந்தார்.
இந்த திட்டத்திற்கு உலு லங்காட் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காகப்
பொதுப்பணித் துறைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்
தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு சாயம் பூசப்பட்ட சாலையின்
மையக்கோடுகள் இரவு வேளையில் ஒளியை பிரதிபலிக்கும் தன்மையைக்
கொண்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.




