ஷா ஆலம், நவ 17- சிலாங்கூர் அரசு வழங்கிய தொழில்நுட்ப மற்றும்
தொழில் திறன் கல்வித் (திவேட்) திட்டங்கள் வாயிலாக கடந்த 2018 முதல்
கடந்தாண்டு வரை 3,957 மாணவர்கள் பட்டதாரிகளாக உருவாகியுள்ளனர்.
இத்திட்டத்தின் அமலாக்கத்திற்காக அக்காலக்கட்டத்தில் 1 கோடியே 15
லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
திவேட் திட்டத்தை மேம்படுத்துவதில் மாநில அரசுக்கு உள்ள கடப்பாட்டை
மறுவுறுதிப்படுத்திய அவர், இந்நோக்கத்திற்காக டெல்கின், பெரேடுவா,
யமஹா, ஜெஸ்தோ, ஆப்பிள், டெசால்ட் சிஸ்டம் மற்றும் மூனிக்
பல்கலைக்கழகத்துடன் விவேக பங்காளித்துவத்தை மாநில அரசு
கொண்டுள்ளதாகச் சொன்னார்.
சந்தையில் அதிக தேவை உள்ள உயர் திறன்களை திவேட் பட்டதாரிகள்
கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு இந்த பங்காளித்துவம் மிக
அவசியமாகும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பட்டதாரிகள் வேலை
வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு தொழில்துறைகளில் தேவைப்படக் கூடிய திறனையும்
அறிவாற்றலையும் இந்த திட்டம் மாணவர்களுக்கு வழங்குகிறது. இதன்
காரணமாக இந்த திவேட் திட்டத்தில் சேர பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
திவேட் பயிற்சிகளில் ஈடுபட விரும்புவோருக்கு அடிப்படை கல்வி, எண்
மற்றும் எழுத்து போன்ற குறைந்த பட்சத் தகுதி போதுமானது என மாநில
அரசு நிர்ணயம் செய்துள்ளது என்றார் அவர்.
குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றம் எம்40 தரப்பினரின் பிள்ளைகளும்
இந்த திவேட் திட்டத்தில் பங்கேற்பதற்கு ஏதுவாக இத்திட்டத்திற்கு
ஸ்மார்ட் சிலாங்கூர் தொழில் திறன் மற்றும் நிபுணத்துவ முன்னெடுப்பு
(இக்திஸாஸ்) மூலம் நிதியளிக்கப்படுகிறது என அவர் சொன்னார்.
உயர்கல்விக் கூட நிலைக்கு தங்கள் கல்வியைத் தொடர முடியாத
நிலையிலுள்ள மாணவர்கள் இந்த திவேட் திட்டத்தில் சேர்வதை உறுதி
செய்யும் நோக்கில் பள்ளிகளுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு
வருகிறோம். அதே சமயம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களும்
திவேட் திட்டத்தில் பங்கேற்க முடியும் என அவர் மாநில சட்டமன்றத்தில்
இன்று தெரிவித்தார்.




