ஜோர்ஜ் டவுன், நவ 17- இங்குள்ள புக்கிட் கம்பீர் மலையில் ஏறும் போது
குளவிகள் கொட்டியதில் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஐம்பத்தெட்டு வயதான அந்த மாது பினாங்கு மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தீமோர் லாவுட்
மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் வி. சரவணன்
கூறினார்.
புக்கிட் கம்பீர் மலையில் ஏறும் நடவடிக்கையின் போது குளவிகள்
கொட்டியதாக நம்பப்படும் பெண்மணி ஒருவர் உயிரிழந்தது தொடர்பில்
பினாங்கு மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரிடமிருந்து தாங்கள்
புகாரைப் பெற்றதாக அவர் சொன்னார்.
அப்பெண்ணின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய
இன்று சவப்பரிசோதனை நடத்தப்படும் என சரவணன் தெரிவித்தார்.
முன்னதாகப், புக்கிட் கம்பீர் மலையேறும் நடவடிக்கையின் போது
குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளான பெண்மணி ஒருவருக்குச் சிலர்
முதலுதவி வழங்குவதை சித்தரிக்கும் 10 விநாடி காணொளி சமூக
ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.




