கோலாலம்பூர் நவ 15- செலாயாங் பசார் போரோங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொக்சோ மற்றும் இபிஎஃப் செலுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அதிரடி நடவடிக்கையில் களம் இறங்கினார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வளதுறை, போலீஸ், கோலாலம்பூர் மாநகர் மன்றம், இபிஎஃப், சொக்சோ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் ஒட்டுமொத்த காய்கறிகளின் ஏற்றுமதி தளமாக செலாயாங் பசார் போரோங் இயங்கி வருகிறது. செலாயாங் பசார் போரோங்கில் 480 முதலாளிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
காய்கறிகள், மீன்கள் மற்றும் பழங்களை வியாபாரம் செய்யும் இவர்களிடம் 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அரசாங்கம் நிர்ணயம் செய்த 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம், சொக்சோ மற்றும் இபிஎஃப் முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து நேரடியாக களம் இறங்கியதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.








