சான் பிரான்சிஸ்கோ, நவ.14 - பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி பாலஸ்தீனம் அல்லது பரந்த மத்திய கிழக்கை மட்டுமல்லாது அனைத்துலக உறவுகளிலும் இன்னும் பல ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பாலஸ்தீனத்தில் இன்று நடப்பது நாம் அனைவரையும் பாதிக்கும். இந்த மோதலின் தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை என்பதோடு நீண்ட காலத்திற்கும் நீடிக்கும் என்று அவர் சொன்னார்.
இவை அனைத்துலகச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்கள் என்று நேற்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் "ஆசிய பசிபிக் வல்லரசுகளின் போட்டி மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்கள்" என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்பு விரிவுரையில் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதோடு காஸா மீதான இடைவிடாத குண்டுவீச்சையும் நிறுத்த வேண்டும் என மலேசியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் நான் அறிவித்தபடி, இதில் இரண்டு வழிகள் இல்லை. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கிறோம். அதே சமயம், அப்பாவி உயிர்களைக் கொல்லும் செயல்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பணயக்கைதிகளாகப் பிடிக்கும் செயல்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதேபோல், காஸாவிலுள்ள பொதுமக்கள், வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் மீது இரவு பகல் பாராமல் நடத்தப்படும் குண்டுவீச்சு தாக்குதல்களையும் அப்பாவி உயிர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அட்டூழியங்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மிருகத்தனமான மற்றும் கண்மூடித்தனமான போரினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியாக மலேசியா இதனைக் கருதுகிறது என்று பிரதமர் கூறினார்.








