சான் பிரான்சிஸ்கோ, நவ 15- மலேசியா-அமெரிக்கா விரிவான கூட்டமைப்பு உருவாக்கம் கண்டு பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த உறவை வலுப்படுத்துவற்கான நடைமுறைத் திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் வகுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியாவும் அமெரிக்காவும் தங்களின் இரு தரப்பு உறவை விரிவான கூட்டமைப்புக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்த்திய நிலையில் இந்த கூட்டமைப்பின் உருவாக்கம் அடுத்த ஆண்டுடன் பத்தாண்டுகள் நிறைவடைகின்றன என்ற அவர் சொன்னார்.
மலேசியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் பரந்த பிராந்தியத்தின் நலனுக்காக இந்த உறவை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து இவ்வாண்டு இறுதிக்குள் நடைமுறைத் திட்டத்தை வரையவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் “வல்லரசுகள் இடையிலான போட்டியும் ஆசிய பசிபிக்கில் அதிகரித்து வரும் பதற்றமும்“ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய போது அன்வார் இதனைக் கூறினார்.
அமெரிக்காவுடனான மலேசியாவின் உறவு சீனா, ஜப்பான் அல்லது பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் அளவுக்கு கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இல்லாவிட்டாலும் அந்த உறவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு கூட்டணியோ அல்லது குறிப்பாக விவாதத்திற்குரியதோ அல்ல. பெரும்பாலும் அந்த உறவு வெற்றுப் பார்வையில் மறைக்கப்பட வேண்டும் எனத் தோன்றுகிறது. அவ்வாறு செய்வது இரு நாடுகளும் கட்டியெழுப்பிய நீண்ட கால உறவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருக்கும் என அவர் சுமார் 250 மாணவர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் கூறினார்.
நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பாதுகாப்புக்கும் அமெரிக்காவுடனான விவேக பங்காளித்துவம் மிக முக்கியமானது என மலேசியா கருதுகிறது என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.








