பாச்சோக், நவ 15- இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இணையக்
குற்றங்கள் தொடர்பான 19,224 புகார்களை புக்கிட் அமான் வர்த்தக
குற்றப்புலனாய்வுத துறை பதிவு செய்துள்ளது. கடந்தாண்டின் இதே
காலக்கட்டத்தில் பதிவான 15,659 குற்றங்களுடன் ஒப்பிடுகையில் இது 23
விழுக்காடு அதிகமாகும்.
இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நிகழ்ந்த இணையக்
குற்றங்களினால் ஏற்பட்ட இழப்பு 68 கோடியே 70 லட்சம் வெள்ளியாகும்
என்றும் இது கடந்தாண்டைக்காட்டிலும் 29 விழுக்காடு அதிகம் என்றும்
தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை துணையமைச்சர் தியே நீ சிங்
கூறினார்.
இவ்வாண்டு தொடங்கி அக்டேபர் வரை 4,898 இணைய பாதுகாப்பு
தொடர்பான புகார்களை மலேசிய சைபர் செக்கியூரிட்டி அமைப்பினால்
நிர்வகிக்கப்படும் சைபர் 999 எனும் இணைய எதிர்வினை மையம்
பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
இங்குள்ள மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற
கிளந்தான் மாநில நிலையிலான தேசிய இணைய மோசடி எதிர்ப்பு பிரசார
இயக்கத்தின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத்
தெரிவித்தார்.
இந்த இணைய மோசடி எதிர்ப்பு இயக்கத்தை கிளந்தான் தெங்கு
மக்கோத்தா டாக்டர் தெங்கு முகமது ஃபாய்ஸ் பெத்ரா சுல்தான்
இஸ்மாயில் தொடக்கி வைத்தார். கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ
முகமது நசாருடின் டாவுட்டும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
இத்தகைய இணைய மோசடி நடவடிக்கைகளால் கோடிக்கணக்கான
வெள்ளி இழப்பும் மனோரீதியிலான பாதிப்பும் உண்டாவதால்
இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படுவது அவசியமாகும் என
தியோ வலியுறுத்தினார். இந்த மோசடியில் சமூகத்தின் பல்வேறு நிலையிலான மக்கள் குறிப்பாக, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள்,
வர்த்தகர்கள் போன்ற தொழில் நிபுணர்களும் மூத்த குடிமக்களும் அதிகம்
பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








