ஷா ஆலம், நவ 11- வடகிழக்கு பருவமழை காலத்தில் மாநிலத்தில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக 40 நீர் இறைப்பு பம்ப் கருவிகளை மாநில அரசு தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த கருவிகள் பயன்படுத்தும் நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் தாங்கள் தெனாகா நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாக அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
நம்மிடம் இப்போது நிறைய நீர் இறைப்பு கருவிகள் உள்ளன. கைவசம் உள்ள 40 கருவிகளை வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு விரைந்து அனுப்ப தயாராக உள்ளோம். அவற்றில் கும்புலான் செமெஸ்தா நிறுவனம் வழங்கிய 30 பம்ப் கருவிகளும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர மின் உற்பத்தி செய்யும் ஜெனேரேட்டர் கருவிகளையும் நாம் தயார் செய்ய வேண்டும். ஜெனேரட்டர்கள் சாதனங்கள் இல்லாத பட்சத்தில் நீர் இறைப்பு பம்ப் கருவிகளை பயன்படுத்த இயலாது. ஆகவே, நடமாடும் ஜெனேரட்டர் சாதனங்களை வழங்கி உதவுமாறு தெனாகா நேஷனல் நிறுவனத்தை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ள அபாயம் மிகுந்த தாமான் ஸ்ரீ மூடாவில் பம்ப் சாதனங்களை மேம்படுத்தும் திட்டம் குறித்து கருத்துரைத்த இஷாம், இந்த நடவடிக்கை சாதகமான மேம்பாடுகளைத் தந்துள்ளதாக பதிலளித்தார்.
தாமான் ஸ்ரீ மூடாவில் நீர் இறைப்பு பம்ப் சாதனங்களை மேம்படுத்தும் பணி சீராக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இப்பணி முற்றுப் பெறும் என எதிர்பார்க்கிறோம். இப்பணி பூரத்தியானவுடன் விநாடிக்கு 13,000 லிட்டர் நீரை வெளியேற்றும் சக்தி கொண்ட ஒன்பது நீர் இறைப்பு சாதனங்களை ஸ்ரீ மூடா கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.








