ஜொகூர் பாரு, நவ 9 - சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்திடம் 200,000 வெள்ளிக்கும் அதிகமான போலி பணக் கோரிக்கைகளை சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த மனிதவள மேலாளர் ஒருவரை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
35 வயதான அப்பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக எம்ஏசிசி அலுவலகத்திற்கு நேற்று காலை 10.00 மணிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறின.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த நிர்வாகி தேசிய பொருளாதார மறு உத்வேகத் திட்டத்தின் (பெஞ்சானா) ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பிக்க தொழிலாளர் சரிபார்ப்பு படிவத்தைப் பயன்படுத்தி இணையம் வாயிலாகத் தவறான தகவல்களை சொக்சோவிடம் சமர்ப்பித்ததாக அறியப்படுகிறது.
தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்றும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
ஜோகூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ அஸ்மி அலியாஸை தொடர்பு கொண்டபோது, இந்த கைது நடவடிக்கையை உறுதி செய்தார். 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 18ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.




