NATIONAL

அண்மைய வெள்ளம் தொடர்பில் அறிக்கைத் தேவை- மந்திரி புசார் உத்தரவு

9 நவம்பர் 2023, 3:06 AM
அண்மைய வெள்ளம் தொடர்பில் அறிக்கைத் தேவை- மந்திரி புசார் உத்தரவு

ஷா ஆலம், நவ. 9 - மாநிலத்தின் பல பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கான அடிப்படைக் காரணங்கள் குறித்த விரிவான அறிக்கையை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பர் 10) சமர்ப்பிக்குமாறு மாநில அரசு துறைகளுக்குக், குறிப்பாக ஊராட்சி மன்றங்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.

விரைவில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையிலும்  சமீபத்தில் ஏற்பட்ட  வெள்ளத்தில் பல பகுதிகள் மூழ்கியதோடு இதன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில்   உள்ள பிரச்சனைகளைக் கையாளும்படி ஊராட்சி மன்றங்களுக்கு நான் ஒரு மாதத்திற்கு முன்பு அறிவுறுத்தினேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவங்கள் இன்னும் நிகழ்கின்றன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை நாங்கள்  பார்ப்போம் என்றார் அவர்.

அண்மையில் பெய்த கடுமையான  மழையையும் நாம் கருத்தில் கொள்வோம். இதன் தொடர்பில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கை தேவை என்றார் அவர்.

நேற்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  மந்திரி புசார் கழகத்தின்  நிறுவன ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ள பாதிப்பு நிறைந்த  டெங்கில்,  கம்போங் செம்பராய், பந்திங்கில் உள்ள லபோஹான் டாகாங் மற்றும் புக்கிட் சாங்காங் போன்ற பகுதிகள் மீண்டும் பாதிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர்,

இப்பிரச்சனையை கையாள்வதில் தாம் தீவிரமாக இருப்பதாகக் கூறினார். சிலர் செக்சன் 13 (ஷா ஆலம்) பகுதியை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அந்த பகுதி மோசமான வெள்ளத்தை எதிர்நோக்கவில்லை. தெருக்களில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது.  இருப்பினும், நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழையை நாடு எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதால் இதுவும் கவனிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.